Tuesday, August 24, 2021

பார்த்தீனிய களையை அழிக்கும் மெக்சின் வண்டுகள்

பார்த்தீனிய களை


பயிர்களுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது பார்த்தீனியம் களைச்செடி.
அமெரிக்காவை தாயகமாக கொண்ட பார்த்தீனியம் என்ற நச்சு களைச்செடி 1955 ல் வெளிநாட்டு தானியங்களுடன் இந்தியாவிற்குள் இறக்குமதியானது. எல்லா சூழ்நிலையிலும் வளரும் இக்களை இந்தியாவில் 7.7 கோடி எக்டேர் பரப்பளவில் பரவி மனித நலத்திற்கு தீங்கு விளைவித்து வருகிறது.
பார்த்தீனியத்தில் உள்ள பார்த்தினின், கொரனாபிலின், டெட்ரநியூரிஸ், அம்புரோசின் போன்ற நச்சுப் பொருட்களால் தோல், கண் அரிப்பு, வெடிப்பு, கொப்புளம் உருவாகிறது. பால்மாடுகள் இக்களை செடிகளை உண்பதால் அதன் பாலிலும் நச்சுதன்மை கலக்கிறது. பயிர்களில் 70 சதவீத மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பல்லுயிர் பெருக்கம் குறைகின்றது.
இத்தாவரத்தின் வயது 3 முதல் 4 மாதங்கள். அக்டோபர் - டிசம்பரில் இதன் வளர்ச்சி அதிகம். ஒவ்வொரு செடியும் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் விதைகளை உருவாக்குகிறது. ஒரு சதுர மீட்டர் மண்ணில் லட்சம் விதைகள் புதைந்து கிடக்கின்றன. இவற்றுக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக உயிர் இருக்கும். எனவே விதைகள் முளைக்கும் முன்பும் முளைத்த செடிகள் விதை உண்டாவதற்கு முன்பும் கட்டுப்படுத்த வேண்டும்.
முளைப்பதற்கு முன் எக்டேருக்கு இரண்டரை கிலோ அட்ரசின் களைக்கொல்லி பயன்படுத்தலாம். செடியானது பூக்கும் முன் 200 கிராம் உப்பு, ஒரு மில்லி சோப்பை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். 10 மில்லி கிளைப்போசேட், 20 கிராம் அம்மோனியம் சல்பேட், 2 மில்லி சோப்பு திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அல்லது 3 மில்லி மெட்ரிபுசின், 2 மில்லி சோப்பு திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்கலாம்.
பூப்பதற்கு முன் கையுறை அணிந்து அல்லது கருவியின் மூலம் செடியை வேருடன் பிடுங்கி எரிக்க வேண்டும். தரிசு நிலங்களில் அடர் ஆவாரை, துத்தி வகை செடிகளை வளரச் செய்தால் இவற்றின் வளர்ச்சி குறையும். மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளரும் தாவர இனங்களை ஊக்குவிக்கலாம். பார்த்தீனியம் செடியை தின்று அழிக்கும் 'சைக்கோகிராமா பைக்கலரேட்டா' என்ற மெக்சிகன் வண்டுகளை பரவச் செய்யலாம். இந்த வண்டுகள் மழைக்காலங்களில் மட்டும் சிறப்பாக செயல்படும். அல்லது செடியை வேருடன் அகற்றி சிறிதாக வெட்டி மட்க வைத்து உரமாக்கலாம்.

முரளி அர்த்தனாரி
இணைப்பேராசிரியர்
சின்னமுத்து
துறைத்தலைவர் உழவியல் துறை கோவை வேளாண்மை பல்கலை
0422 - 661 1246


நன்றி தினமலர்:

https://m.dinamalar.com/weeklydetail.php?id=57339

No comments:

Post a Comment

The Kashmir Only to India